Published : 05 May 2025 12:12 AM
Last Updated : 05 May 2025 12:12 AM
சென்னை: நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. இயற்பியல் பாடக் கேள்விகள் மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும்நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம்.
இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் சுமார் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும், 13 வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21 ஆயிரத்து 960 பேர் தேர்வெழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணியில் இருந்து தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர், தேர்வு மையம் மூடப்பட்டு, தேர்வர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகளும், பரிசோதனையும் இருந்தது. கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டும், சில மாணவிகள் காதணி, மூக்குத்தி, மோதிரம், செயின், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வந்ததையும், அதனை தேர்வு மையத்துக்கு வெளியே பெற்றோரிடம் கழற்றிக் கொடுத்து ஒப்படைத்து சென்றதையும் பார்க்க முடிந்தது.
பெரும்பாலான மாணவிகள் சாதாரண உடைகளையே அணிந்து வந்திருந்தனர். மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களில் பலரும் டி-ஷர்ட், அரைக்கை சட்டை, பேண்ட்அணிந்திருந்தனர். மேலும் பெல்ட், ஷூ அணிந்து வந்திருந்த மாணவர்கள் அதனை தங்கள் பெற்றோரிடம் கொடுத்து சென்றனர். தேர்வு மைய நுழைவுவாயிலில் போலீஸாரும், தேர்வை நடத்தக் கூடிய தேசிய தேர்வு முகமை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் தொழில்நுட்பம், மின்னணு சார்ந்த பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்திய பிறகே மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். மாணவர்கள் கொண்டு வந்த தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டைகளும் சரிபார்க்கப்பட்டன. சென்னை, எம்சிசி பள்ளி மையத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேரன் தேர்வெழுதினார்.
பிளஸ் 2-வில் அதிக கேள்வி: தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, "இயற்பியல் பாடகேள்விகள் மிகக் கடினமாக இருந்தது. இதில் மிகக் குறைந்த கேள்விகளுக்கே பதிலளிக்க முடிந்தது. வேதியியல் பாட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. உயிரியல் கேள்விகள் எளிதாக இருந்தது. ஆனால் வினாக்களை சிந்தித்து பதில் எழுத அதிக நேரம் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் பிற வினாக்களில் கவனம் செலுத்த முடியவில்லை. 11-ம் வகுப்பு கேள்விகள் அதிகமாக கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மொத்தம் கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கும் பதிலளித்தோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT