Published : 25 Apr 2025 06:25 AM
Last Updated : 25 Apr 2025 06:25 AM
சென்னை: சென்னை இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்குபெறலாம்.
6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு, கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினை பயிற்சிகள், நெருப்பில்லா சமையல் விளையாட்டு, கீர்த்தனைகள் கற்றுத் தரப்படும். 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனை, ஒரு நிமிட உரை, கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு, மன வரைபடங்கள் கற்பிக்கப்படும். சிறுவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்வதன் மூலம் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தை கற்று பயனடைவார்கள். மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
இந்த சிறப்பு முகாம் ஏப்ரல் 28-ம் தேதி தொடங்குகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி நேரம் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ள www.iskconchennai.org/summercamp என்ற இணையதளம் அல்லது, 8072599295 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT