Published : 19 Apr 2025 06:36 AM
Last Updated : 19 Apr 2025 06:36 AM
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி, நடப்பாண்டு சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT