Published : 18 Apr 2025 04:10 PM
Last Updated : 18 Apr 2025 04:10 PM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய இறுதி விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஏப்ரல் 11-ம் தேதி வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையிலான இறுதி விடைக்குறிப்லை என்டிஏ இன்று (ஏப்.18) வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாக உள்ளன.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT