Published : 15 Apr 2025 06:50 AM
Last Updated : 15 Apr 2025 06:50 AM
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா - Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜூன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஏப்.16-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கோவா’ தேர்வு தேர்ச்சி கட்டாயம்: தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு (‘கோவா’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குருப்-4 தேர்வில் வெற்றிபெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் தங்களின் தகுதிகாண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் பதவி பணிவரன்முறை செய்யப்படும். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்தால் இந்த விதிமுறை பொருந்தாது.
மேலும், தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளுக்கும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT