Published : 12 Mar 2025 06:10 AM
Last Updated : 12 Mar 2025 06:10 AM

கணிதம், வணிகவியல் வினாத்தாள் எளிது: இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளர் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இவற்றில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வில் எதிர்பார்த்த கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவர்கள்கூட எளிதாக தேர்ச்சி பெறமுடியும். அதேநேரம் கணிதத்தில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களி 4-ம், வணிகவியலில் 5 மதிப்பெண் கேள்விகளில் 2-ம் சற்று கடினமாக கேட்கப்பட்டன. எனவே, முழு மதிப்பெண் (சென்டம்) பெறுபவர்களின் எண்ணிக்கை சற்று குறையலாம்’’ என்றனர்.

தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்கான கணினி அறிவியல், புள்ளியியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x