Published : 11 Mar 2025 04:05 PM
Last Updated : 11 Mar 2025 04:05 PM
சென்னை: ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் exams.nta.ac.in/JIPMAT என்ற வலைதளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 18-ம் தேதி வரை செலுத்தலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பாடத்திட்டம், கட்டணம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT