Published : 10 Mar 2025 05:26 AM
Last Updated : 10 Mar 2025 05:26 AM
நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நாளை நிறைவடைகிறது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் நாளை (மார்ச் 11) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT