Published : 07 Mar 2025 08:54 PM
Last Updated : 07 Mar 2025 08:54 PM
சென்னை: எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் நாளை (சனிக்கிழமை) பதிவேற்றம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் நுழைவுத்தேர்வு செயலாளர் பேராசிரியர் ஆர்.ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சார்பில் எம்பிஏ, எம்சிஏ சேர்க்கைக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வையும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் சேர்க்கைக்கான பொது பொறியியல் நுழைவுத்தேர்வையும் (சீட்டா) அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
டான்செட் எம்சிஏ நுழைவுத் தேர்வு மார்ச் 22-ம் தேதி காலையில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 10,287 பேர் விண்ணப்பித்துள்ளனர். டான்செட் எம்பிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22-ம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. இத்தேர்வெழுத 22,806 பேர் விண்ணப்பித்துள்ளனர். சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் 23-ம் தேதி காலை நடக்கிறது. இத்தேர்வுக்கு 5,208 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
மேற்கண்ட நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் சனிக்கிழமை (நாளை) இணையதளத்தில் (www.tancet.annauniv.edu/tancet) பதிவேற்றம் செய்யப்படும். மூன்று நுழைவுத் தேர்வுகளும் சேர்த்து மொத்தம் 38,301 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 16 நகரங்களில் 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT