Published : 07 Mar 2025 11:13 AM
Last Updated : 07 Mar 2025 11:13 AM
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் நாளை மறுநாள் (மார்ச் 9) முதல் திருத்தம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி இன்றுடன்(மார்ச் 7) முடிவடைந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக மார்ச் 9 முதல் 11-ம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT