Published : 23 Feb 2025 07:16 AM
Last Updated : 23 Feb 2025 07:16 AM
சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென என்டிஏ அறிவித்துள்ளது.
நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைதளம் வழியாக மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 18, 19-ம் தேதிகளில் அவகாசம் வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தேர்வானது தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT