Published : 22 Feb 2025 06:54 AM
Last Updated : 22 Feb 2025 06:54 AM
சென்னை: இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘யுவிகா’ (இளம் விஞ்ஞானி) என்ற திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின்கீழ் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, இஸ்ரோ மையங்களில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள் தொடர்பாக பல்வேறு செய்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பபதிவு வரும் 24-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
விருப்பம் உள்ளவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் மார்ச் இறுதியில் வெளியாகும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஏப்ரல் முதல் வாரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT