Published : 10 Feb 2025 12:37 AM
Last Updated : 10 Feb 2025 12:37 AM
சென்னை: ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ எனும் அறிவியல் விநாடி-வினா இறுதிப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பேசிய ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, விமானத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரியுடன் இணைந்து ‘வானமே எல்லை’ எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் வில் ஏவியேஷன் (VIL AVIATION) ஆகியவை இணைந்து வழங்கின.
இதில் பங்கேற்க தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். முதல்கட்ட விநாடி-வினா இணைய வழியில் நடத்தப்பட்டது. அடுத்த சுற்றுக்கு 300 பேர் தகுதிபெற்றனர். அவர்களுக்கான இறுதிக்கட்டப் போட்டிகள் சென்னையில் ஆலந்தூரில் உள்ள ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இதிலிருந்து இறுதிச்சுற்றுக்கு 12 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இறுதிச்சுற்று நடத்தப்பட்டது.
முதல் பரிசு ரூ.25,000: போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷன் ரவி (வித்யா மந்திர் சீனியர் செகன்ட்ரி பள்ளி, சென்னை), மிதிலேஷ் பாஸ்கர் (ஜி.எஸ் கல்யாணசுந்தரம் நினைவு சிபிஎஸ்இ பள்ளி, கும்பகோணம்) ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. அடுத்து ஜோஷ்வா (வேலம்மாள் பள்ளிக் குழுமம், சென்னை), முகுந்தன் (ஹயாகிரிவாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, சிவகாசி) ஆகியோருக்கு 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், திவ்யம் குப்தா (சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, கோவை), தனுஜ் (கேஎஸ்ஆர் அக் ஷரா அகாடமி, திருச்செங்கோடு) ஆகியோருக்கு 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, ரெமோ குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூசன்ஸ் முதல்வர் ரித்திக் பாலாஜி, விஎல் ஏவியேஷன் நிறுவன செயல் இயக்குநர் ஏ.சதீஷ்குமார் பங்கேற்று, பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சதீஷ்குமார் பேசும்போது, “உலக அளவில் ட்ரோன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இறுதிப் போட்டிக்குத் தேர்வான மாணவர்களுக்கு ஹெலிகாப்டரில் பயணிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
‘இந்து தமிழ் திசை’யின் தலைமை செயல் அலுவலர் ஷங்கர் வி.சுப்பிரமணியம் பேசும்போது, “உலகின் பெரிய நிறுவனமான கூகுள் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், தேடல் உணர்வுதான். தேடலின் மூலம் நாம் அறிவைப் பெருக்க வேண்டும். விநாடி-வினா போட்டிக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
ரெமோ குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூசன்ஸ் முதல்வர் ரித்திக் பாலாஜி பேசும்போது, ‘‘நாம் மகிழ்ச்சியாக இருப்பதைவிட, நம்மால் எவ்வளவு பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம். வான்வெளித் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் ரெமோ கல்லூரியை தேர்வு செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியதாவது: விமானம், விண் வெளித் துறைகள் சுவராஸ்யமானவை. மேலும், அதிக வேலைவாய்ப்புகளும் உண்டு. இவற்றில் நுழைய விமானத்துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கத் தேவையில்லை. பொறியியல், கணிதம், அறிவியல் எனவிருப்பமான துறைகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தாலே போதும். பிளஸ்-2 வகுப்பில் கணிதம், அறிவியல் படிக்காவிட்டாலும், சீட் எனும் நுழைவுத்தேர்வு வாயிலாக ஐஐடியில் சேரமுடியும். அங்கு இளநிலை வடிவமைப்பு படித்தால், விமானத் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. நம் நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்க முயற்சிக்கலாம். தமிழகம், உத்திரப் பிரதேச மாநிலங்களில் விமானம், விண்வெளித் துறை சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி, நிதிஉதவியும் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எக்ஸ் க்விஸ் ஐடி நிறுவனத்தின் தலைமை செயலர் அலுவலர் அரவிந்த் விநாடி- வினா போட்டிகளை வழிநடத்தினார். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT