Published : 19 Nov 2025 06:38 AM
Last Updated : 19 Nov 2025 06:38 AM
சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ரிச்சி தெருவில் நரேஷ்குமார் (38) என்பவர் லேப்-டாப் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்பருக்கு சொந்தமான ரூ.55 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் நரேஷ்குமாரை வழிமறித்தனர்.
தாங்கள் போலீஸ் எனக் கூறி, பணத்தை பறித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார், பூக்கடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதன்பேரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அன்பரசி (30), விமல் அபிஷேக் ஞானஷாம் (24), காயத்ரி (29) ஆகிய 3 பேரை கடந்த அக். 11-ம் தேதி கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடையைச் சேர்ந்த அன்வர்தீன் (39) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், அதே மாவட்டம் குனிய முத்தூரைச் சேர்ந்த பாவா (30), செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தைச் சேர்ந்த ரூபன் சக்ரவர்த்தி (29) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT