Published : 17 Nov 2025 03:40 PM
Last Updated : 17 Nov 2025 03:40 PM
ஶ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இறுதி தீர்ப்பை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் அதிமுக நிர்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிக்கை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. இன்று (திங்கள் கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். நவம்பர் 21-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறிய நீதிபதி புஷ்பராணி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT