Published : 15 Nov 2025 07:24 AM
Last Updated : 15 Nov 2025 07:24 AM
பொன்னேரி: சென்னை, புழல் - சிவராஜ் தெருவை சேர்ந்தவர் பரதராமர் (61). இவரது வீட்டின் அருகே அதே தெருவைச் சேர்ந்த குமரவேல் (43), காரை நிறுத்தி வந்துள்ளார். இதனால், இரு தரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டு பிப். 1-ம் தேதி குமரவேல், பரதராமர் வீட்டருகே கார் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு முற்றியது.
இதனால், குமரவேல், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பரதராமரையும், அவரது மருமகளையும் தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பரதராமர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப். 4-ம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த புழல் போலீஸார், குமரவேல், மனைவி கல்பனா, தாய் மாமன் அருணகிரி, மைத்துனர் பழனி, சகோதரிகள் மலர், சங்கீதாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-4-ல் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர். லாசர் வாதிட்டார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், குமரவேல், அருணகிரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து,நேற்று முன் தினம் பொன்னேரி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-4-ன் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு அளித்தார். குமரவேலுக்கு, பரதராமரை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பரதராமரின் மருமகளை தாக்கிய செய்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை, குமரவேல் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குமரவேலின் தாய் மாமன் அருணகிரிக்கு (64), குமரவேலுடன் சேர்ந்து பரதராமரை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. குமரவேலின் மனைவி கல்பனா, மைத்துனர் பழனி, சகோதரிகள் மலர், சங்கீதா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT