Published : 13 Nov 2025 03:13 AM
Last Updated : 13 Nov 2025 03:13 AM
சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு 2023 அக்டோபர் 25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக கிண்டி போலீஸார் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சென்னை நந்தனத்தைச் சேர்ந்த ரவுடி வினோத் என்ற கருக்கா வினோத்தை (42) கைது செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு என்பதால் என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்தனர். அவர்கள் தனியாக கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மலர்விழி நேற்று தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT