Published : 11 Nov 2025 06:33 AM
Last Updated : 11 Nov 2025 06:33 AM
சென்னை: சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பின் மீண்டும் போதைப் பொருள் கடத்திய இளைஞர், பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். சென்னையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், லட்சுமணன் தெருவில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் உடைமைகளை சோதித்தபோது, அதில் மெத்தம்பெட்டமைன், உயர் ரக கஞ்சா எண்ணெய், போதை ஸ்டாம்ப்கள், போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருள் வைத்திருந்த கேளம்பாக்கத்தில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியனான வாரன் கிரெய்க் கனி (29), அவரது கூட்டாளியான சூளைமேடு தஹிரா நிஹால் (26), அசோக் நகர் லஷ்மி நரசிம்மராவ் (27), வடபழனி ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் வாரன் கிரெய்க் கனி ஏற்கெனவே மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும், தண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT