Published : 06 Nov 2025 09:18 PM
Last Updated : 06 Nov 2025 09:18 PM
திருவாரூர்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்த தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (40). இவர் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், 2021 அக்டோபர் மாதம் 26ம் தேதி 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்திச் சென்று, ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் எரவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லலிதாவை போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரத் ராஜ், குற்றம்சாட்டப்பட்ட லலிதாவுக்கு, 2 போக்சோ பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள், மற்றொரு போக்சோ பிரிவின் கீழ் 5 ஆண்டுகள், மேலும் 2 பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளி லலிதாவை திருச்சி பெண்கள் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT