Published : 06 Nov 2025 06:34 AM
Last Updated : 06 Nov 2025 06:34 AM
சென்னை: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், வள்ளுவர் தெருவில் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள அம்மன் கரு வறையில் இருந்த பொருட்கள் கடந்த 3-ம் தேதி சிதறிக் கிடந்தன. அம்மன் சிலை கையிலிருந்த பித்தளை திரிசூலம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோயிலில் திருட்டில் ஈடுபட்டது வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த பாலாஜி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதில் பாலாஜி வியாசர்பாடி பகுதியில் 2 இருசக்கர வாகனங்களை திருடியதும், அதில் ஒரு வாகனத்தில் சென்று, கோயிலில் புகுந்து திரிசூலத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் தங்கம் என நினைத்து அதை திருடியதாக பாலாஜி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT