Published : 06 Nov 2025 07:14 AM
Last Updated : 06 Nov 2025 07:14 AM
கடலூர்: குடி போதையில் காரை ஓட்டி, சாலையோரத்தில் நின்ற 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமான எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் முதுநகர் அருகேயுள்ள அன்னவெளி அருந்ததி நகரைச் சேர்ந்த வடிவேல் (35), பாஸ்கர் (41), பெரிய காட்டு சாகையைச் சேர்ந்த ஜெயராஜ் (45) ஆகியோர் கட்டிடத் தொழிலாளிகள்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் மாலை அன்னவெளி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து திட்டக்குடி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இதில் வடிவேல், ஜெயராஜ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் மோகன் (60) என்பவர் காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஓட்டி வந்துள்ளார். அவருடன் காவலர் இமாம் உசேன் இருந்துள்ளார். இருவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த முதுநகர் போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, எஸ்எஸ்ஐ ராஜேந்திரனை கைது செய்தனர். இதற்கிடையில், எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT