Published : 02 Nov 2025 09:49 AM
Last Updated : 02 Nov 2025 09:49 AM
சென்னை கீழ்ப்பாக்கத்தில் டேங்கர் லாரி, கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ,இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, பட்டாளம், கார்ப்பரேஷன் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை இவரது சகோதரர்களான சீனிவாசன் (33), விஜய் (28) மற்றும் நண்பர் கிஷோர் (28) ஆகியோர் காரில் வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த டேங்கர் லாரி, ஈகா திரையரங்கம் சிக்னலில் சேத்துப்பட்டு செல்லும் சாலையில் திரும்பியது. அப்போது, காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கியது.
காரில் சென்ற சீனிவாசன், விஜய், கிஷோர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளும், அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரும், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், டேங்கர் லாரி ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT