Published : 31 Oct 2025 07:54 PM
Last Updated : 31 Oct 2025 07:54 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (அக்.31) தீர்ப்பளித்தது.
மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன்(27). வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இவருக்கும் மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் உணவகம் ஒன்றில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில், கதிரவனை கண்ணன் தாக்கினார். இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின், 2022ம் ஆண்டு ஆக.17ம் தேதி இரவு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கண்ணனை அங்கு வந்த ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கதிரவன் உட்பட 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 22 பேரில் ஒருவரான கலைஞர் காலனியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் 2024 மார்ச் 20ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கண்ணனின் சகோதரர் மில்கி என்கிற சந்திரமோகன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், கண்ணன் கொலை வழக்கு விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட கதிரவன்(41), தேவா (எ) மகாதேவன்(30), சேது(26), சந்தோஷ்(21), திவாகர்(26), கார்த்திக்(30), சுபாஷ் சந்திரபோஸ்(29), ஹரிஷ்(25), பிரித்திவிராஜ்(31) ஆகிய 9 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். மேலும், வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கூடுதலாக கைது செய்யப்பட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம சேயோன் ஆஜரனார். இவ்வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.
இவ்வழக்கில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அதில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பிறழ் சாட்சி அளித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்க உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தண்டனை பெற்ற 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபாகரன் என்பவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீர்ப்பையொட்டி ஆம்புலன்ஸ் வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதையறிந்த நீதிபதி சத்தியமூர்த்தி வழக்கு விசாரணை நடைபெற்ற முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த பிரபாகரனிடம், தங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை, அதனால் இந்த வழக்கில் இருந்து நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள் என்று தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையை இரு தரப்பினரும் ஜெய் பீம் திரைப்படம் தொடர்பாக முன் வைத்த விமர்சனங்களும், இரு தரப்பினரிடையேயும் முன் விரோதம் ஆழமாவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது என தீர்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT