Published : 24 Oct 2025 08:10 AM
Last Updated : 24 Oct 2025 08:10 AM
சென்னை: வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்த விவகாரத்தில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாதச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் அபுபக்கர் சித்திக்.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜூலையில் ஆந்திராவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் பதுங்கி இருந்த வீட்டில் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின் போது மதுரை திருமங்கலத்தில் பைப் வெடிகுண்டு வைத்தது, பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கொலை உட்பட பல வழக்குகளிலும் அபுபக்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அவரை அடுத்தடுத்து காவலில் எடுத்து விசாரித்தனர்.
7 நாள் காவல்: இந்நிலையில், அபுபக்கர் சித்திக்கை தமிழக போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தபோது, ஆந்திராவில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து சுமார் 30 கிலோ வெடி மருந்துகள், மின்னணு கருவிகளை ஆந்திர போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவர்கள் தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து விசாரிப்பதற்காக சென்னை வந்த என்ஐஏ அதிகாரிகள் அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர். புழல் சிறையில் இருந்து அவரை பலத்த பாதுகாப்புடன் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT