Published : 21 Oct 2025 05:07 PM
Last Updated : 21 Oct 2025 05:07 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி, ஓட்டுநர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் 191 பேருக்கு 61 குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை டிஎஸ்பி குமரன் (35) அரசு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.
இந்த ஜீப்பை ஆயுதப்படை பிரிவு காவலர் அருள்ராஜ் (25) ஓட்டிs சென்றுள்ளார். ஜீப், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிஎஸ்பி குமரனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஓட்டுநர் அருள் ராஜுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மணவாள நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT