Published : 14 Oct 2025 09:07 PM
Last Updated : 14 Oct 2025 09:07 PM
கரூர்: தவெக நிர்வாகிகள் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு அக்கட்சி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரையும் நாளை (அக்.15) நேரில் ஆஜர்படுத்த மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த வி.பி.மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தனிப்படையினர் செப்.29-ம் தேதி கைது செய்தனர். இருவரிடமும் கரூர் நகர காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் விடிய, விடிய விசாரணை நடத்திய நிலையில் செப்.30-ம் தேதி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்.8-ம் தேதி நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் தள்ளுபடி செய்வதாகக் கூறி நீதிபதி இளவழகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு 5 நாள் விசாரணை நடத்த வேண்டும் என கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அக்.9-ம் தேதி மதியழகனை நேரில் ஆஜர்படுத்தி அனுமதி கேட்டனர். மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் 2 நாட்கள் அனுமதி வழங்கியதை அடுத்து இரு நாட்கள் மதியழகனிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு அக்.11-ம் தேதி நீதிமன்றத்தில் மதியழகனை ஒப்படைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மதியழகனின் ஜாமீன் மனு நேற்று (அக்.13) விசாரணைக்கு வந்தது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி இளவழகன் ஒத்திவைத்தார்.
மதியழகன், பவுன்ராஜின் நீதிமன்ற காவல் இன்றுடன் (அக்.14) முடிவடையும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழு மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் வீடியோ கான்பரன்ஸில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்ய எஸ்ஐடி சார்பில் அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு தவெக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மேலும் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கருத்தை நேரில் கேட்ட பிறகே காவல் நீட்டிப்பு குறித்து முடிவு செய்ய வேணடும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் வி.பி.மதியழகன், பவுன்ராஜ் இருவரையும் நாளை (அக்.15) நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT