Published : 10 Oct 2025 07:27 AM
Last Updated : 10 Oct 2025 07:27 AM
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டுக்குள் பலத்த பாதுகாப்பையும் தாண்டி கடந்த மாதம் 19-ம்தேதி இளைஞர் ஒருவர் புகுந்து மாடியில் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த மாதம் 28-ம் தேதி விஜய் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நடந்த சோதனையில், அது புரளி எனத் தெரியவந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் 2-வது முறையாக விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனே் போலீஸார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து விஜய் வீட்டை சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்த நிலையில், இதுவும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சபீக் (37) என்பதும், மீனம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
விஜய் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரச்சாரம் செய்ய வர இருப்பதாக, யாரோ ஒருவர் அவரிடம் கூறியதை தொடர்ந்து, கரூர் சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என்பதற்காக, மதுபோதையில், சபீக் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT