Published : 09 Oct 2025 08:04 PM
Last Updated : 09 Oct 2025 08:04 PM

பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த இளைஞர் - வைரல் வீடியோவால் விசாரணை

ராமேஸ்வரம்: பாம்பன் சாலைப் பாலத்தின் நடுபகுதியிலிருந்து இளைஞர் கடலில் குதித்த காட்சி பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்திருந்த ஒருவர் பாம்பன் பாலத்தில் தூக்குப் பாலம் அருகே ரயில் சென்றபோதுதான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா கிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இளைஞர் ஒருவர் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கீழே குதித்த காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெரிய வந்ததும், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். இது குறித்து பாம்பன் போலீஸார் கூறுகையில், “செல்போனில் செல்ஃபி, ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் இதுபோன்ற விபரீத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். சிலர் தற்செயலாக கடலில் விழுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் குதிக்கின்றனர்.

இந்த வீடியோவில் உள்ள இளைஞர் தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தாரா ? அல்லது சமூக வலை தளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குதித்தாரா ? அல்லது ஏஐ தொழில் நுட்பம் மூலம் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகிறோம்” என்று பாம்பன் போலீஸார் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x