Published : 05 Oct 2025 04:51 PM
Last Updated : 05 Oct 2025 04:51 PM
சென்னை: டெலிவரி பாய் போல் நோட்டமிட்டு பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட உ.பி கொள்ளையர்கள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை, புஜங்காரா வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில், 2-வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 8ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக தியாகராஜன் இது குறித்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.
இதில், கொள்ளையில் ஈடுபட்டது உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷாம் முகமது (35), நூர் இஸ்லாம் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சென்னை வந்து சென்ட்ரலில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, சென்னையில் பல்வேறு இடங்களுக்கு டெலிவரி பாய் போல சென்று பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. ஷாம் முகமது மீது மட்டும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT