Published : 23 Sep 2025 06:12 AM
Last Updated : 23 Sep 2025 06:12 AM
சென்னை: கொளத்தூரில் 17 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் முருகன் நகர் 2-வது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர், சென்னை மாநகர பேருந்து நடத்துநராக பணிபுரிகிறார். இவரது மகன் ஹர்ஷ்வர்தன் (17). 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் ஹர்ஷ்வர்தன், கொளத்தூர், விவி நகரில் ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கொளத்தூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.
இதில், ஹர்ஷ்வர்தன் மொபெட்டில் வேகமாக சென்றது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், நாளடைவில் இரு தரப்பினருக்கும் இடையே பகையாக மாறியது. இந்நிலையில், ஹர்ஷ்வர்தன், கடந்த 18-ம் தேதி தனது நண்பருடன் ஒரு மொபெட்டில் கொளத்தூர், பஜனை கோயில் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த எதிர் தரப்பினருக்கும், ஹர்ஷ்வர்தன் தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு முற்றியது.
இதையடுத்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்கி உள்ளனர். அப்போது, ஹர்ஷ்வர்தன் நண்பர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், 6 பேர் கொண்ட எதிர் தரப்பிடம் ஹர்ஷ்வர்தன் தனியாக சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து, உருட்டுக் கட்டையால் தாக்குதலுக்கு உள்ளான ஹர்ஷ்வர்தன் அங்கேயே மயங்கி விழுந்தார்.
பின்னர், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, ராஜமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரும்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் பிகாம் முதலாமாண்டு படிக்கும் கொளத்தூரைச் சேர்ந்த மாணவர் மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT