Published : 23 Sep 2025 07:26 AM
Last Updated : 23 Sep 2025 07:26 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலெக்ட்ரீசியனான இவர், திருச்செந்தூரை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தலைமறைவாயினர். தனது மகளைக் காணவில்லை என, திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக, மணிகண்ட னுக்கும், பெண்ணின் வீட்டினருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில், மணிகண்டன் வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை ஆலந்தலையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தோப்பூர் விலக்கு அருகே 3 பேர் அவரை மறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.
மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு மணிகண்டன் அங்கிருந்து ஓடியுள்ளார். அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்து தப்ப முயன்றார். ஆனால், விடாமல் விரட்டி வந்த அந்த நபர்கள், மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். காதல் விவகாரத்தில் இக்கொலை நடைபெற்றது தெரியவந்தது.
பெண்ணின் தந்தை திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கி.நட்டார் (48), ப.கணேசன் (30) மற்றும் பெண்ணின் தம்பி உட்பட 3 சிறுவர்கள் என, 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT