Published : 19 Sep 2025 07:04 AM
Last Updated : 19 Sep 2025 07:04 AM
மூணாறு: மூணாறில் தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து, கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மூணாறு பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சித்திராபுரத்துக்கு அருகேயுள்ள தட்டாத்திமுக்குவில் தனியார் சார்பில் ரிசார்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரிசார்ட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சரிந்தது. மேலும், கட்டிடத்தின் ஒரு பகுதியும் சரிந்து விழுந்தது. இதில் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
தகவலறிந்து வந்த அடிமாலி, மூணாறு தீயணைப்புத் துறையினர், மண்ணில் புதைந்த இருவரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தது சங்குபடியைச் சேர்ந்த ராஜீவ் (40), பைசன்வாலியைச் சேர்ந்த பென்னி (49) என்பது தெரியவந்தது. மூணாறு சிறப்பு வட்டாட்சியர் காயத்ரி, பள்ளிவாசல் ஊராட்சித் தலைவர் பிரதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்பு சிறப்பு வட்டாட்சியர் காயத்ரி கூறும்போது, “பாதுகாப்பற்ற இடத்தில் கட்டப்பட்டதால் பணிகளை நிறுத்துமாறு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மூணாறைச் சுற்றிலும் நடைபெறும் மற்ற கட்டுமானப் பணிகளும் அடுத்தடுத்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.
இது தொடர்பாக வெள்ளத்தூவல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி ஷெபின், ஷெரின் அனிலா ஆகியோரைக் கைது செய்தனர். மூணாறை சுற்றிலும் அனுமதி பெறாத கட்டுமானங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசிக்கும் வகையில் தங்குமிடம் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளும் இவர்கள், அவர்களது பாதுகாப்பை கண்டுகொள்வதில்லை. இதனால் பள்ளத்தாக்கு, மண்சரிவு அபாயம் உள்ளிட்ட பகுதிகள் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT