Published : 18 Sep 2025 05:44 AM
Last Updated : 18 Sep 2025 05:44 AM
சென்னை: தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.4.45 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னை மண்ணடி, மரைக்காயர் தெருவில் வசித்து வருபவர் அப்துல் அபுதாகீர் (31). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரிமேன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2022 ஜூன் 9-ம் தேதி ரூ.4.45 லட்சம் பணத்தை தி.நகர், பனகல் பார்க் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது, இயந்திரம் செயல்படவில்லை.
இதையடுத்து, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். வழியில் தி.நகர் ஜிஎன் செட்டி ரோடு மேம்பாலத்தில் 2 இருசக்கர வாகனங்களில் பின் தொர்ந்து வந்த 4 நபர்கள் அப்துல் அபுதாகீரை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.
காயம் அடைந்த அப்துல் அபுதாகீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், வழிப்பறி தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக இவ்வழக்கில் தொடர்புடைய சாருஹாசன், ரகுமான், உதயகுமார், ஷேக் அப்துல்லா ஆகிய 4 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
இவ்வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிழக்குத் தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசனை (29) போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், வெங்கடேசன் மீது ஏற்கெனவே 23-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT