Published : 16 Sep 2025 06:47 AM
Last Updated : 16 Sep 2025 06:47 AM
சென்னை: கோயம்பேடு சந்தையில், வியாபாரியிடம் செல்போன் திருடிவிட்டு, அவரிடமே விற்க முயன்ற செல்போன் திருடன் பிடிபட்டார். தப்பி ஓடிய அவரது கூட்டாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை கோட்டூர், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்தவர் உமாசங்கர் (43). கோயம்பேட்டில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை காய்கறிக் கடைக்கு தேவையான காய்கறிகளை அங்கு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த செல்போனை யாரோ திருடிச் சென்றனர்.
இதனால், வேதனை அடைந்த உமாசங்கர் மாயமான செல்போன் குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். கிடைக்காததால் விரக்தியில் அங்கிருந்து அவரது கடைக்கு சென்று, வழக்கம்போல் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் அங்கு 2 இளைஞர்கள் வந்தனர். வந்தவர்கள் செல்போன் ஒன்றை உமாசங்கரிடம் காண்பித்து, ‘அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு பணம் கொடுங்கள்’ என கேட்டுள்ளனர். அதை வாங்கிப் பார்த்தபோது, மாயமான தனது போன் என உமாசங்கருக்கு தெரிந்தது.
சுதாரித்துக் கொண்ட அவர், கடை பணியாளர்களிடம் ரகசியமாக தெரிவித்து செல்போன் திருடர்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றார். ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் தப்பி ஓடினார். பிடிபட்ட நபரை கோயம்பேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்டது மாங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் தப்பி ஓடிய அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர். செல்போனை திருடிவிட்டு, யாரிடம் திருடினோம் எனத் தெரியாமல், திருடியவரிடமே செல்போனை விற்க முயன்ற சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT