Published : 15 Sep 2025 06:35 AM
Last Updated : 15 Sep 2025 06:35 AM
சென்னை: சென்னை வானகரம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை(52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியின் குடியிருப்போர் பொது நலச் சங்கத்தின் பிரதிநிதியாகவும் உள்ளார். ராஜீவ் நகரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் விக்னேஷ்(28) என்பவரும் வசித்து வருகிறார்.
இவர் தனது நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை ராஜீவ் நகர் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் ஏழுமலையிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷிடம் ஏழுமலை கேட்டுள்ளார்.
அப்போது விக்னேஷ், தகாத வார்த்தைகளால் ஏழுமலையை திட்டியது மட்டுமில்லாமல், அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி, பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் வானகரம் போலீஸார் விக்னேஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜீவ் நகரில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான காலி நிலத்தை விக்னேஷ் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுகுறித்து வெங்கடேஷ் கேட்டபோது அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT