Published : 15 Sep 2025 07:13 AM
Last Updated : 15 Sep 2025 07:13 AM
திருச்சி: திருச்சி சமயபுரம் அருகே சென்னை நகைக் கடை ஊழியர்கள் மீது மிளகாய்ப் பொடியை தூவி, 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக் கடை மேலாளர் பிரதீப்ஷாட்(40) மற்றும் ஊழியர்கள் இருவர் காரில் சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்றனர். அங்கு நகைகளை விற்பனை செய்த பின்னர், மீதமிருந்த 10 கிலோ தங்க நகைகளுடன் சென்னைக்குப் புறப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் பகுதியில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றனர். அப்போது மற்றொரு காரில் வந்த 4 பேர் மேலாளர், ஊழியர்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, காரிலிருந்த 10 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் ஆந்திராவை நோக்கிச் சென்றதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT