Published : 14 Sep 2025 08:57 AM
Last Updated : 14 Sep 2025 08:57 AM
கொல்லம்: கேரளாவின் கொல்லம் நகரில் 79 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஒரு கும்பல் ரூ.3.72 கோடி மோசடி செய்துள்ளது.
கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பில் வந்த ஒருவர் தன்னை பிஎஸ்என்எல் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். முதியவரின் செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் சீருடையில் வந்த மற்றொருவர் முதியவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அது குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். மேலும் முதியவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஒரு போலி உத்தரவை காட்டியுள்ளார். இதில் விசாரணை அதிகாரியிடம் வாட்ஸ்ஆப் அழைப்பில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முதியவருக்கு போலியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிறகு முதியவரை மிரட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 29 வரை அந்த கும்பல் ரூ.3.72 கோடி மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக முதியவர் அளித்த புகாரின் பேரில் கொல்லம் சைபர் கிரைம் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT