Published : 14 Sep 2025 01:45 AM
Last Updated : 14 Sep 2025 01:45 AM
திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், பூ ஏற்றிச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த மண்மலை பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பூக்களை, பெங்களூரு பூ மார்க்கெட்டுக்கு தினமும் வாகனங்களில் கொண்டுசெல்வது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை, கோலப்பாடி, கண்ணக்குருக்கை, உச்சிமலைகுப்பம், இறையூர் போன்ற பகுதிகளில் நேற்று பூக்களை சேகரித்துக் கொண்டு, பெங்களூருவுக்கு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இதில் 3 பேர் சென்றனர்.
மண்மலை ஊராட்சிக்கு உட்பட்ட ஆணைமங்கலம் பகுதியில் சென்றபோது, சரக்கு வாகனமும், எதிரே பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநரான செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி(27) அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சரக்கு வாகன உரிமையாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(45), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பின்னர் மூவரின் உடல்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து குறித்து செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT