Published : 12 Sep 2025 06:56 AM
Last Updated : 12 Sep 2025 06:56 AM
சென்னை: சூப்பர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் 3 சதவீத லாபம் தருவதாகக் கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சண்முகம். மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வருகிறார். இவருக்கு 2017-ம் ஆண்டு அண்ணாநகர், ஆர்.வி.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (52) என்பவரது நட்பு கிடைத்தது.
திருவான்மியூரில் சூப்பர் மார்க்கெட் நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் வியாபாரத்தில் 3 சதவீதம் லாபம் தருவதாகவும் சதீஷ்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகம் சூப்பர் மார்க்கெட் நடத்த முதல் கட்டமாக ரூ.2.5 லட்சமும், அடுத்ததாக ரூ.10 லட்சமும் கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு 3 சதவீத லாபம் என சிறிதளவு பணத்தை மட்டும் சதீஷ்குமார் கொடுத்தாராம். அதன் பிறகு கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். போன் அழைப்பையும் ஏற்கவில்லையாம். அதிர்ச்சி அடைந்த சண்முகம் இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் ரூ.12.50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT