Published : 10 Sep 2025 06:58 AM
Last Updated : 10 Sep 2025 06:58 AM
சென்னை: சென்னையில் பிடிபட்ட பிஹார் இளைஞர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஹ்லத்தூர் முகமது அக்லிக் முஜாஹித் (22) என்பவரை கடந்த ஜூன் மாதம் உள்ளூர் போலீஸாரும், தமிழக தீவிரவாத தடுப்புப்படையினரும் தங்களுக்கு ரகசியத் தகவலின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை தேச பாதுகாப்பு கருதியும், முக்கியத்துவம் கருதியும் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
மேலும், முஜாஹித்தை தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதும், இந்திய அரசுக்கு எதிராக ஜிஹாத் செய்ய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதே வேளையில், முஜாஹித்துடன், பல இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரில் 9, பிஹாரில் 8, உத்தரபிரதேசத்தில் 2, கர்நாடகம், மகராஷ்டிரம், தமிழகம் தலா 1 என மொத்தம் 21 இடங்களில் நேற்றுமுன்தினம் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர்.
சோதனை நடைபெற்ற இடங்களில் வசித்தவர்கள் அனைவரும், முஜாஹித்துடன் சமூக ஊடகங்கள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவ்வழக்கு தொடர்பாக, முஜாஹித்துடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT