Published : 09 Sep 2025 06:33 AM
Last Updated : 09 Sep 2025 06:33 AM

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

சென்னை: சென்​னை, திரு​வான்​மியூரை சேர்ந்த போஜய்யா என்​பவரது மனைவி தேவேந்​திரம் (38). மூக்​கடைப்பு மற்​றும் தலை​வலி காரண​மாக கடந்த 2005-ம் ஆண்​டு, வடபழனி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யின் ஓர் அங்​க​மாக உள்ள காது, மூக்​கு, தொண்டை ஆராய்ச்சி மையத்​துக்கு சிகிச்​சைக்​காக சென்​றுள்​ளார்.

அங்கு சிகிச்சை மேற்​கொண்ட நிலை​யில், திடீரென, அவர் மூளைச்​சாவு அடைந்து இறந்து விட்​ட​தாக, கடந்த 2005 அக்​.12 அன்று அந்த மருத்​துவ​மனை நிர்​வாகி​கள் அறி​வித்​தனர். தனது மனை​வி​யின் மரணத்​துக்கு மருத்​து​வர்​களின் அலட்​சி​ய​மும், சேவை குறை​பாடுமே காரணம் எனக் கூறி, ரூ.1 கோடி இழப்​பீடு கோரி மாநில நுகர்​வோர் ஆணை​யத்​தில் போஜய்யா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசா​ரணை, மாநில நுகர்​வோர் ஆணை​யத்​தின் தலை​வ​ரான ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்​.சுப்​பையா முன்​பாக நடந்தது. அப்​போது, போஜய்யா தரப்​பில் வழக்​கறிஞர் தேன்​மொழி சிவபெரு​மாள் ஆஜராகி, மருத்​து​வர்​களின் கவனக் குறைவு மற்​றும் அலட்​சி​யப் போக்​கின் காரண​மாகவே மனு​தா​ரரின் மனைவி சிறு​வய​தில் அநியாய​மாக இறந்​துள்​ளார் என வாதிட்​டார்.

அப்​போது, தனி​யார் மருத்​து​வ​மனை நிர்​வாகம் தரப்​பில், தங்​களது மருத்​து​வ​மனை​யில் பல்​வேறு துறை​களைச் சேர்ந்த மருத்​து​வர்​களுக்கு வாடகை அடிப்​படை​யில் இடம் ஒதுக்கி கொடுக்​கப்​பட்டு, நோயாளி​களுக்கு மருத்​துவ ஆலோ​சனை​களை வழங்கி வரு​கின்​றனர். அவர்​கள் அளிக்​கும் சிகிச்​சை​யில் பிரச்சினை ஏற்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட மருத்​துவ ஆலோ​சகரே அதற்கு பொறுப்​பேற்க முடி​யுமேயன்​றி, மருத்​து​வ​மனை நிர்​வாகம் பொறுப்​பேற்​காது என வாதிடப்​பட்​டது.

அதே போல, சிகிச்​சையளித்த காது, மூக்​கு, தொண்டை ஆராய்ச்சி மையம் சார்​பில், மூளை நரம்​பில் ஏற்​பட்ட வீக்​கம் மற்​றும் ரத்​தக் கசிவு காரண​மாகவே மனு​தா​ரரின் மனைவி மூளைச்​சாவு அடைந்து இறந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட ஆணை​யம் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், ”மனு​தா​ரரின் மனை​விக்கு காலை சிற்​றுண்​டிக்கு பிறகு 6 மணி நேரம் கழித்தே மயக்க மருந்து கொடுக்க வேண்​டும் என்ற நடை​முறை கடைபிடிக்​கப்​பட​வில்​லை.

நோயாளிக்கு ஏற்​படும் எதிர்​மறை விளைவு​களை கவனத்​தில் கொள்ள சிகிச்​சையளித்த மருத்​து​வர்​கள் தவறி​விட்​டனர். மருத்​து​வர்​களின் அலட்​சி​யமே மனு​தா​ரரின் மனை​வி​யின் மரணத்​துக்கு காரணம். எனவே, சிகிச்​சையளித்த அறுவை சிகிச்சை நிபுண​ர் ஜெய​ராமி ரெட்​டி, மயக்​க​வியல் நிபுணர் கிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் இழப்​பீட்​டுத் தொகை​யாக ரூ. 10 லட்​சத்​தை​யும், வழக்கு செல​வுத் தொகை​யாக ரூ. 50 ஆயிரத்​தை​யும் மனு​தா​ர​ருக்கு 8 வார காலத்​தில் வழங்க வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x