Published : 08 Sep 2025 01:19 PM
Last Updated : 08 Sep 2025 01:19 PM
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே விஷம் குடித்த அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற தம்பியை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை ஒன்றியம் காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்கின்ற திருமூர்த்தி (45). இவரது அண்ணன் ரகுபதி ராம் (50). இருவரும் தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள். ரகுபதிராமின் மனைவி வெண்ணிலா (45) சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். வெண்ணிலாவை வேலைக்குச் செல்ல வேண்டாம் என ரகுபதிராம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீறி வேலைக்கு சென்றால் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக ரகுபதிராம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வெண்ணிலா வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுபதிராம் விஷம் குடித்துவிட்டு, வெண்ணிலாவுக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் ரகுபதிராமின் தம்பி செந்தில் ஆகியோர் வீட்டுக்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது செந்திலுக்கும் ரகுபதி ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரகுபதிராம் தேங்காய் வெட்டும் அரிவாளால் செந்திலை கழுத்தில் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த செந்திலை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.
விஷம் அருந்திய ரகுபதிராம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT