Published : 05 Sep 2025 06:56 AM
Last Updated : 05 Sep 2025 06:56 AM
சென்னை: சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்தில் ரூ.1.62 கோடியை மீட்ட சென்னை போலீஸார், அதை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் கைது, ஆன்லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த வகை மோசடி மூலம் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணமும் சுருட்டப்படுகிறது.
சைபர் மோசடியைத் தடுக்கவும், பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் சென்னை காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் இவற்றில் எங்கேனும் புகார் தெரிவித்தால் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய பணிகளை சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடத்த மாதத்தில் (ஆகஸ்ட்) மட்டும் ரூ.1 கோடியே 62 லட்சத்து 53 ஆயிரத்தை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டு, அந்த பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், நடப்பு 2025-ம் ஆண்டில் இதுவரை ரூ.20 கோடியே 41 லட்சத்து 89,113 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் இணைய வழி பணப் பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் நம்பகத்தன்மையை அறிந்தும் பயன்படுத்த வேண்டும். புகார்களுக்கு 1930 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என சென்னை பெருநகர காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT