Published : 29 Aug 2025 01:34 PM
Last Updated : 29 Aug 2025 01:34 PM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பல்லவன் நகரை சேர்ந்தவர் பாரி மார்க்ஸ் (46). இவர், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோரஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை பாரி மார்க்ஸ், தன் காரில் பூந்தமல்லி பகுதியில் இருந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பாரி மார்க்ஸின் கார், பூந்தமல்லி- ஆவடி சாலையில், ஆவடி- வசந்தம் நகர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சாலையோரத்தில் நின்ற சரக்கு வாகனம் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளில் பயணித்த திருவேற்காட்டைச் சேர்ந்த கணினி வல்லுநரான அறிவரசன் (41), அவரது மனைவி சரண்யா (36) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் நொறுங்கியது; சரக்கு வாகனம் பலத்த சேதமடைந்தது. விபத்தை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய காருக்குள் சிக்கியிருந்த பாரி மார்க்ஸை மீட்டனர். தற்போது, பாரி மார்க்ஸை சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT