Published : 26 Aug 2025 04:35 PM
Last Updated : 26 Aug 2025 04:35 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் முத்தையா (58) என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நாங்குநேரி அருகே தம்பபுரத்தை சேர்ந்தவர் முத்தையா. இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அச்சிறுமியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து முத்தையாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலியிலுள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின், சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் உள்ளிட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை 14 போக்சோ வழக்குகளில் 14 பேருக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டு உள்ளதாகவும், அதில் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT