Published : 23 Aug 2025 06:25 AM
Last Updated : 23 Aug 2025 06:25 AM
சென்னை: வீட்டு உரிமையாளர் சவுதி அரேபியா சென்ற நிலையில், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர், உரிமையாளருக்கே தெரியாமல் மீதமுள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்துள்ளார். சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் சாரா வஹாப்(34).
இவருக்கு ராயப்பேட்டை, கவுடியா மடம் சாலையில் சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் 3 கடைகளும், 1-வது மற்றும் 2-வது தளத்தில் 4 வீடுகள், கடைகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்றோருடன் சவுதி அரேபியா சென்று விட்டார்.
தரை தளத்தில் புல்லா ராவ் என்பவர் மட்டும் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வந்தார். மற்ற கடைகள் மற்றும் வீடுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சாரா வஹாப், சென்னை திரும்பியபோது புல்லா ராவ் இறந்திருந்தார்.
அவரது மகன் அசோக் (34) என்பவர், தந்தை ஏற்கெனவே நடத்திய ஸ்டூடியோ கடையை நடத்தி வந்தார். மேலும், பூட்டியிருந்த கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து, தன்னை இவ்வீட்டின் உரிமையாளர் எனக்கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, அதன்மூலம் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் வரை மோசடி செய்திருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாரா வஹாப், இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சாரா வஹாப் போலீஸில் புகார் அளித்தார். இதில், சாரா வஹாப்புக்குச் சொந்தமான வீடுகளை முறைகேடாக வாடகைக்கு விட்டு அதன்மூலம் ரூ.27 லட்சம் வரை அசோக் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT