Published : 23 Aug 2025 06:03 AM
Last Updated : 23 Aug 2025 06:03 AM
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை மது, கஞ்சா போதையில் தாக்கிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலை கழக மாணவர்கள் பிரபாகரன், விஸ்வா, ஹரீஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழகம் எதிரேயுள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் வந்த சிலர் மாணவர்களிடம் தகராறு செய்ததுடன், அவர்களை கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீஸார், மாணவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்0.
இந்நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, பல்கலைக்கழகம் அருகில் உள்ள வடக்கு வீரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கூறியது: 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இதனால், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதை தட்டிக் கேட்கும் பேராசிரியர்கள், மாணவர்களைத் தாக்குகின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT