Published : 21 Aug 2025 07:09 AM
Last Updated : 21 Aug 2025 07:09 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள முத்தா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுவன். இச்சிறுவனை, கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி, முத்தாபுதுப்பேட்டையை அடுத்த பாலவேடு பகுதியை சேர்ந்த பிரவீன் (21) பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரவீனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், பிரவீன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி நேற்று முன் தினம் அளித்தார்.
அதில், பிரவீனுக்கு 3 சட்டப்பிரிவுகளின் கீழ், 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணமாக அரசு ரூ. 3 லட்சம் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த டில்லிபாபு (22) பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டில்லிபாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி நேற்று அளித்த தீர்ப்பில், டில்லிபாபுக்கு 3 சட்டப்பிரிவுகளின் கீழ், 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT