Published : 19 Aug 2025 06:56 AM
Last Updated : 19 Aug 2025 06:56 AM
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலூர் அருகிலுள்ள பொட்டப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார்(21) என்பவர், தும்பைப்பட்டியைச் சேர்ந்த ராகவி(24) என்பவரைக் காதலித்தார். ராகவிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார்.
இந்நிலையில், இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சித்தி வீட்டில் தன்னை கொடுமைப்படுத்துவதாக ராகவி செல்போன் மூலம் சதீஷ்குமாருக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலையத்தில் இரு வீட்டாரிடமும் ஆகஸ்ட் 16-ம் தேதி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பெற்றோருடன் செல்ல ராகவி மறுத்து, சதீஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்.
இரவில் திருச்சி நோக்கி இவர்கள் சென்றபோது, நான்குவழிச் சாலையில் அய்யாப்பட்டி அருகே பின்புறமாக வந்து கார் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். உடனே, காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை அடித்துக் கொன்றது. ராகவியும் தாக்கப்பட்டு காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் ஜெயந்தி, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். இதில், குழந்தைகள் இருக்கும்போது, சதீஷ்குமாருடன் ராகவி சென்றதால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் வெளிநாட்டிலுள்ள அவரது சகோதரர் ராகுல் தூண்டுதலின்பேரில், இக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ராகவியின் தந்தை அழகர் (55) மற்றும் அய்யனார் (22), அருண்பாண்டியன் (24) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், ராகுல் உட்பட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT