Published : 14 Aug 2025 06:41 AM
Last Updated : 14 Aug 2025 06:41 AM
பால்கர்: சகோதரியின் வயதான மாமனார் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு ஆண் வேடத்தில் சென்று ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர காவல் துறை உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) மதன் பல்லால் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் தனது சகோதரியின் வயதான மாமனார் (66) வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திருட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வசை நகர எல்லைக்கு உட்பட்ட மாணிக்பூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை பிற்பகல் அந்தப் பெண் ஆண்போல் மாறுவேடமிட்டு சென்றுள்ளார். வீட்டுக்குள் நுழைந்ததும் வயதான மாமனாரை கழிவறையில் தள்ளி தாழிட்டுவிட்டு 1.4 கிலோ தங்கம், 2.3 கிலோ வெள்ளி, ரொக்கம் என ரூ.1.50,84,050 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள்: பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 75 முதல் 80 சிசிடிவிகளை ஆராய்ந்ததில் திருடிய பொருட்களை ஆண் உருவத்தில் சென்று ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து பெண் உருவில் வந்து அதனை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
திருடிய பெண் குஜராத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அன்று இரவே நவசாரியில் வைத்து அந்த பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் ஜோதி மோகன் பானுசாலி என்பதும், அவர் தனது சொந்த சகோதரியின் மாமனார் வீட்டுக்கு ஆண் போன்று மாறுவேடத்தில் சென்று திருடியதையும் ஒப்புக்கொண்டார். திருடுபோன பொருட்கள் அனைத்தும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு மதன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT